Monday, July 23, 2012

குழந்தையும் தெய்வமும்

சில சமயங்களில் குழந்தைகள் தெய்வங்களாக தெரிவார்கள். நாம் தான் மனிதர்களாக அதை உணராமல் இருக்கிறோம்.
 
என் பெண்ணின் போர்வையை துவைத்து வைத்து இருந்தோம். அவள் அதை பார்த்து யார் செய்ததது என்று கேட்க, கலா பாட்டி என்று கூறினோம் (கலா எங்கள் வீட்டில் வேலை செய்பவர்). இவள் வேகமாக சென்று நன்றி கூறி விட்டு வந்தாள். எதற்கு என்று கேட்டதற்கு, போர்வைக்கு வாய் இல்லை தானே என்று பதில் வந்தது.
 
சின்ன ஒரு செயலில் தெய்வத்தை காட்டிய என் பெண்ணின் முன் நான் மிகவும் சிறியதாக தெரிந்தேன்.

Friday, July 20, 2012

Vipanai


“அக்கா, ஒரு புக் பத்து ரூபா தான் அக்கா. ஒண்ணு வாங்கிக்கோங்க!!! வீட்ல சின்ன பசங்க கலர் அடிக்கற புக் வாங்கிகோங்க அக்கா.”
“வேண்டாம்பா. சும்மா தொந்தரவு பண்ணாத. வேற யார் கிட்டயாச்சும் கேளு”
“அக்கா. ப்ளீஸ் அக்கா.”
“வேண்டாம்னு சொல்றேன் இல்ல. இப்போ போறியா இல்லையா”
“ச்சே. இந்த பசங்க தொல்ல தாங்கல. பஸ் வேற வந்து தொலைய மாட்டேங்குது. சீக்கிரம் வந்த வேலைய முடிச்சிட்டு சீக்கிரம் வீட்டுக்கு போலாம்”
ஸ்டாப்பில் இறங்கி வீட்டு கதவை தட்டினாள்.
“யாரு”
“மேடம். நான் சூப்பர் சோப்பு கம்பெனில இருந்து வரேன். ஒரு சோப்பு வாங்கி பாருங்க மேடம். ரொம்ப நல்லா இருக்கும்”
“வேண்டாம்மா. சும்மா தொந்தரவு பண்ணாத. வேற யார் கிட்டயாச்சும் கேளு!!!!!!”

கேள்வி


குழந்தைகளின் கேள்விக்கு
விடை தெரியாததை விட
நாம் அப்படி கேட்டதில்லையே
என்ற காரணத்திற்காகத்
தான் கோபம் வருகிறதோ!!!